Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பாட்காஸ்ட் கலந்துரையாடலில் ஈடுபட்டார்

பிரதமர் திரு நரேந்திர மோடி லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பாட்காஸ்ட் கலந்துரையாடலில் ஈடுபட்டார்


லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்திய பாட்காஸ்ட் உரையாடலின் முக்கிய அம்சங்கள்

பிரதமர் திரு நரேந்திர மோடியுடனான பாட்காஸ்ட் உரையாடலுக்காக 45 மணி நேரம் உணவு உண்ணாமல் இருந்த லெக்ஸ் ஃப்ரிட்மேன்! தமது உண்ணாவிரத அனுபவத்தை பிரதமர் திரு நரேந்தி மோடி பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியுடனான கலந்துரையாடலுக்காக 45 மணி நேரம் உணவு உண்ணாமல் இருந்ததாகவும், தண்ணீர் மட்டுமே குடித்ததாகவும் லெக்ஸ் ஃப்ரிட்மேன் தெரிவித்துள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உண்ணாவிரத அனுபவம் குறித்த கண்ணோட்டத்தையும் பகிர்ந்து கொண்டார். புலன்களைக் கூர்மைப்படுத்துதல், மனத் தெளிவை மேம்படுத்துதல், ஒழுக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவை அதன் நன்மைகள் என அவர் கூறினார். உண்ணா நோன்பு என்பது வெறுமனே உணவைத் தவிர்ப்பதை விட ஒரு விஞ்ஞான செயல்முறை என்றும், பாரம்பரிய, ஆயுர்வேத நடைமுறைகளுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கினார். உடல் நச்சுத்தன்மையை நீக்க உண்ணாநோன்புக்கு முன் நன்கு நீர்ச்சத்தை  ஏற்றிக் கொள்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். மந்தமாக உணர்வதை விட, உண்ணாவிரதம் தம்மை அதிக ஆற்றலுடன் ஆக்குகிறது என்றும் இன்னும் கடினமாக உழைக்க அனுமதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது குழந்தை பருவத்திலிருந்து நடந்த நிகழ்வுகளையும், வறுமை தமக்கு ஒருபோதும் கடினமாக இருந்ததில்லை என்பதையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தமது எளிமையான குழந்தைப் பருவத்தை நினைவுகூர்ந்தார். வறுமையில் வளர்ந்த போதிலும், அதன் சுமையை ஒருபோதும் உணர்ந்ததில்லை என்று பகிர்ந்து கொண்டார். கஷ்டங்களுக்கு மத்தியில் கூட, இழப்பு உணர்வை ஒருபோதும் அனுபவித்ததில்லை என்பதை அவர் நினைவு கூர்ந்தார். தமது மாமா ஒருமுறை தமக்கு வெள்ளை கேன்வாஸ் காலணிகளை பரிசளித்ததையும், அவற்றை பள்ளியில் இருந்து தூக்கி எறியப்பட்ட சாக்பீஸைப் பயன்படுத்தி பளபளப்பாக்கியதையும் அவர் நினைவு கூர்ந்தார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டதாகவும், வறுமையை ஒருபோதும் போராட்டமாக பார்த்ததில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

சுவாமி விவேகானந்தர் தமது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார்.

தமது குழந்தைப் பருவத்தில், கிராம நூலகத்திற்கு அடிக்கடி சென்றதாகவும், அங்கு சுவாமி விவேகானந்தரைப் பற்றி படித்ததாகவும், அவரது போதனைகள் தமது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் பிரதமர் பகிர்ந்து கொண்டார். உண்மையான நிறைவு என்பது தனிப்பட்ட சாதனைகளிலிருந்து அல்ல, தன்னலமற்ற முறையில் பிறருக்குச் சேவை செய்வதிலிருந்து வருகிறதுஎன்பதை விவேகானந்தரிடமிருந்து கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் இருந்து ஒரு கதையை விவரித்த பிரதமர்ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் விவேகானந்தர், தமது தாயாரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவருக்கு உதவி தேவை என்றும் கேட்டதாக கூறினார். அதற்கு பரமஹம்சர் காளி தேவியிடம் சென்று உதவி கேட்குமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்தார். இந்த சம்பவம் விவேகானந்தருக்கு புரிய வைத்தது எனவும் ஏற்கெனவே அனைத்தையும் உலகிற்கு கொடுத்த தெய்வத்திடம் எப்படி உதவி கேட்க முடியும் எனவும், மனிதகுலத்திற்கு சேவை செய்வதே தெய்வ பக்தியின் மிக உயர்ந்த வடிவம் என்பதை விவேகானந்தர் உணர்ந்தார் என்றும் பிரதமர் கூறினார்.

சுவாமி ஆத்மஸ்தானந்தாவுடனான தமது ஆழமான பிணைப்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார்

ராமகிருஷ்ண பரமஹம்ச ஆசிரமத்தில் தாம் இருந்த நேரத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். அங்கு துறவிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து மகத்தான அன்பைப் பெற்றதாக கூறினார். வாழ்க்கையில் ஒரு வழிகாட்டும் சக்தியாக மாறிய சுவாமி ஆத்மஸ்தானந்தாவுடன் ஆழமான பிணைப்பை வளர்த்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார். சுவாமி ஆத்மஸ்தானந்தா தமது உண்மையான நோக்கம் மக்களுக்கு சேவை செய்வதும் சமூக நலனுக்காக உழைப்பதும் என்று தமக்கு அறிவுறுத்தியதாக பிரதமர் கூறினார்.

ஆர்எஸ்எஸ் – உடனான பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறவு

பிரதமர் திரு நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் அமைப்புடனான தமது ஆழமான தொடர்பை விளக்கினார். அதன் நீடித்த மரபின் ஒரு பகுதியாக இருப்பது தமது பாக்கியம் என்று கூறினார். தன்னலமற்ற சேவையின் மதிப்புகளை ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து பெற்றதை ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று பிரதமர் கூறினார். உலக அளவில் இவ்வளவு பெரிய அளவில் ஆர்எஸ்எஸ் ஆற்றி வரும் பணியை அவர் பாராட்டினார். நாடு முழுவதும் கல்வி, சுகாதார சேவைகளை ஆர்எஸ்எஸ் எவ்வாறு பெரிய அளவில் வழங்கி வருகிறது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். இடதுசாரி தொழிற்சங்கங்களுக்கும் ஆர்எஸ்எஸ் உடன் இணைந்த தொழிலாளர் சங்கத்திற்கும் இடையிலான முரண்பாட்டை அவர் சுட்டிக்காட்டினார். “இடதுசாரி தொழிற்சங்கங்கள் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்என்று கூறுகின்றன. ஆனால் ஆர்எஸ்எஸ் தொழிலாளர் சங்கம் தொழிலாளர்களே, உலகை ஒன்றிணையுங்கள்என்று கூறுகிறது. ஆர்எஸ்எஸ் தனது அணுகுமுறையில் அதன் மதிப்புகளை எவ்வாறு விதைக்கிறது என்பதை இது பிரதிபலிக்கிறது.” என பிரதமர் குறிப்பிட்டார்.

டொனால்ட் டிரம்ப் உடனான தமது நல்ல நட்பின் பின்னணியில் உள்ள ரகசியத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி விளக்கினார்

ஹவுதி மோடி நிகழ்வின் போது டொனால்ட் டிரம்பின் சிந்தனைமிக்க செயல்பாட்டைப் பிரதமர் பாராட்டினார். டிரம்ப் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையையும் அவர் பாராட்டினார். தமக்கும் டிரம்புக்கும் இடையிலான நல்ல உறவுகளைப் பற்றிப் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, தேசம் முதலில் என்ற தமது தத்துவத்துடன் டிரம்பின் தத்துவம் ஒத்துப்போகிறது என்று கூறினார்.

 

டொனால்ட் டிரம்ப் தொடர்பான மற்ற கேள்விகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பதிலளித்தார்

டிரம்பை பல்வேறு தளங்களில் பாராட்டுவதாகப் பிரதமர் கூறினார். டிரம்பைப் பொறுத்தவரை, அமெரிக்கா முதன்மையானது, எனவும் தம்மைப பொறுத்தவரை எப்போதும் பாரதம் முதன்மையானது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். அனைத்து தளங்களிலும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணம் இல்லாமல், இந்தியாவின் நலனில் தாம் உறுதியாக நிற்பதாக பிரதமர் கூறினார். தேசத்தின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், இந்த பொறுப்பை தமக்கு அளித்த 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக பிரதமர் தெரிவித்தார்.

டிரம்பின் ஆற்றல்மிக்க குழுவுடனான சந்திப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்

டிரம்ப் தமது தற்போதைய பதவிக்காலத்தின் பணிகளுக்கு அதிக கவனம் செலுத்துவதாகவும், ஒரு வலுவான குழுவை உருவாக்கியுள்ளதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். தாம் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து எலான் மஸ்க் உடனான தமது நீண்டகால தொடர்பை நினைவு கூர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, சமீபத்திய சந்திப்பு அன்பானது என்று விவரித்தார்.

நிர்வாகம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி விளக்கினார்

முக்கிய நிர்வாக சீர்திருத்தங்களை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பதவியேற்ற பிறகு, தமது அரசு 10 கோடி போலி பயனாளிகளை நலத்திட்டங்களில் இருந்து அடையாளம் கண்டு நீக்கியது என்றார். நேரடிப் பணப் பரிமாற்றம் (டிபிடி) மூலம் சரியான மக்களுக்கு பலன்கள் சென்றடைவதை உறுதி செய்து, ₹ 3 லட்சம் கோடியை அரசு மிச்சப்படுத்தியுள்ளது என்று கூறினார். இது தவிர தமது நிர்வாகம் 1,500 காலாவதியான சட்டங்களையும், 45,000-க்கும் மேற்பட்ட இணக்கச் சுமைகளையும் அகற்றியதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியா சொல்வதை உலகம் ஏன் கேட்கிறது என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி விளக்கினார்

புத்தர், காந்தி ஆகியோரின் பூமியான இந்தியா, அமைதியை வலியுறுத்துகிறது என்று பிரதமர் கூறினார். இந்தியா நல்லிணக்கத்திற்காக நிற்பதால் உலகம் அதன் பேச்சைக் கேட்கிறது என்று அவர் தெரிவித்தார். புதின், ஜெலன்ஸ்கி இருவருடனும் தமக்கு நல்லுறவு இருப்பதாக அவர் தெரிவித்தார். போர்க்களங்கள் உண்மையான தீர்வுகளைக் கொண்டுவராது என்பதை  நினைவூட்டுவதாக அவர் கூறினார். இந்தியா அமைதியில் உறுதியாக உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெளிவுபடுத்தினார்.

உலகிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிவுரை; மோதலைக் கைவிட்டு ஒருங்கிணைப்பைத் தழுவுங்கள்.

லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான பாட்காஸ்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி, “கொவிட் –19 க்குப் பிறகு, உலகம் ஒன்றிணைவது போல் தோன்றியது. ஆனால் அதற்கு பதிலாக, அது மிகவும் துண்டு துண்டாக மாறியது. உலக அளவில் பல மோதல்கள் உருவாகின்றன. சர்வதேச அமைப்புகள் பொருத்தமற்றவையாகிவிட்டன. தேவையான சீர்திருத்தங்களுக்கு உட்படாததால் ஐநா போன்ற அமைப்புகள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றத் தவறிவிட்டன” என்றும் பிரதமர் கூறினார். “உலகம் மோதல்களிலிருந்து விலகி ஒருங்கிணைப்பைத் தழுவ வேண்டும். முன்னேற்றம் என்பது வளர்ச்சியின் மூலமே வருமே தவிர விரிவாக்கம் மூலம் அல்ல” என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

2002 கோத்ரா கலவரம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மனம் திறந்து பேசினார்

கோத்ரா வழக்கு தொடர்பாக பொய்யான கதை பரப்பப்பட்டதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். 2002-ம் ஆண்டுக்கு முன்பு குஜராத்தில் 250-க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடந்துள்ளன என்றார். அந்த காலங்களில் பயங்கரவாத நடவடிக்கைகள், வன்முறைகள் அதிகரித்துக் காணப்பட்டதை அவர் விவரித்தார். ஆனால், 2002-ம் ஆண்டுக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் இதுபோன்ற ஒரு கலவரம் கூட நடக்கவில்லை எனவும் தமது அரசு வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி அனைவரிம் நம்பிக்கை” என்ற கொள்கையை தமது அரசு பின்பற்றுகிறது என்று பிரதமர் கூறினார். கலவரங்களுக்குப் பிறகு பலர் எவ்வாறு தமது பிம்பத்தை கெடுக்க முயன்றனர் என்று அவர் விவரித்தார். ஆனால் இறுதியில் நீதி வென்றது எனவும் அவர் எடுத்துரைத்தார்.

தனிமையில் இருப்பது குறித்து கேட்டபோது, தாம் ஒருபோதும் தனியாக இல்லை என்று பிரதமர் திரு நரேந்திர பதிலளித்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி, “நான் ஒருபோதும் தனிமையாக உணரவில்லை. நான் 1+1 கோட்பாட்டை நம்புகிறேன். ஒன்று நரேந்திர மோடி, மற்றொன்று தெய்வீகம். நான் எப்போதும் தனிமையாக இருப்பதில்லை. ஏனென்றால் கடவுள் எப்போதும் என்னுடன் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை மக்கள் சேவை முக்கியம்” என்று பிரதமர் மேலும் கூறினார். தமக்கு தெய்வீக ஆதரவும் 140 கோடி இந்தியர்களின் ஆதரவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் மக்கள் இயக்கம் என்ற தொலைநோக்குப் பார்வை தமது ஒவ்வொரு முன்முயற்சிக்கும் எவ்வாறு ஊக்கமளிக்கிறது என்பதைப் பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார்

மக்கள் சக்தியை அங்கீகரிப்பதன் மூலம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய மகாத்மா காந்தியின் திறனை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.  சமூகத்தின் கூட்டு வலிமை எல்லையற்றது என்று பிரதமர் கூறினார். மகாத்மா காந்தி 20-ம் நூற்றாண்டில் மட்டுமல்லாமல், 21-ம் நூற்றாண்டிலும், வரவிருக்கும் நூற்றாண்டுகளிலும் மிகச் சிறந்த தலைவர் என்று பிரதமர் கூறினார்.

தாம் பிரதமரானபோது தமது வெளியுறவுக் கொள்கை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்

உலக அரங்கில் நாட்டின் எழுச்சிக்கு உந்து சக்தியாக நிற்கும் இந்தியாவின் 140 கோடி மக்களிடமிருந்து தமது மிகப்பெரிய பலம் வருகிறது என்று பிரதமர் திரு மோடி சுட்டிக் காட்டினார். பதவியில் தமது ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்த பிரதமர், ஒரு மாநிலத்தை மட்டுமே கையாண்ட தாம், பிரதமராக இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை எவ்வாறு கையாள முடியும் என்று சிலர் தம்மை சந்தேகித்ததாகப் பகிர்ந்து கொண்டார். இதற்கு, தமது பதில் உறுதியாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் இருந்தது என அவர் தெரிவித்தார். “இந்தியா அடிபணியாது அல்லது மற்றவர்களை அச்சுறுத்தாது. நாம் நம்பிக்கையுடன், உலகத்துடன் இணைந்து செயல்படுவோம்.” என்பதே அது என்றார்.

இந்தியாவின் உலகளாவிய அணுகுமுறை கண்ணியம், சுயமரியாதை, பரஸ்பர மரியாதை ஆகியவற்றால் வழிநடத்தப்படுகிறது என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். உலகம் ஒரே குடும்பம் என்ற பழங்கால இந்திய தத்துவமான வசுதைவ குடும்பகம் இந்த தொலைநோக்குப் பார்வையின் மையமாக உள்ளது என்று அவர் எடுத்துரைத்தார்.

பிரதமர் மோடி தனது தோல்வி காணாத அரசியல் வாழ்க்கை மற்றும் பா.ஜ.கவின் வெற்றிக்குப் பின்னால் உள்ள ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.

 

தான் தேர்தலை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை நடத்தவில்லை, மாறாக மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை நடத்துவதாகவும் பிரதமர் மோடி கூறினார். நன்மைகள் பாரபட்சமின்றி அனைவரையும் சென்றடையும் வகையில் தனது அரசு ஒரு செறிவூட்டப்பட்ட கொள்கையைப் பின்பற்றுகிறது என்று அவர் மேலும் கூறினார். பா.ஜ.கவின் வெற்றியை எடுத்துரைத்த அவர், அயராது மற்றும் தன்னலமின்றி உழைத்து, நாட்டின் வளர்ச்சிக்காக உண்மையிலேயே அர்ப்பணித்த கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். மற்றவர்களுக்கு உதவுவதன் மதிப்பை ஊக்குவிக்கும் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் உறுப்பினராக இருப்பதில் பெருமை கொள்வதாக அவர் கூறினார்.

பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடியின்  அறிவுரை

பிரதமர் மோடி, உறுதியான தொனியில், பயங்கரவாதத்தை வளர்ப்பதில் பாகிஸ்தானின் நீண்டகால பங்கைக் குறிப்பிட்டார், பயங்கரவாதத்தின் வேர்கள் எங்கே உள்ளன என்பது குறித்து உலகத்திற்கு இனி சந்தேகம் இல்லை என்பதை வலியுறுத்தினார். பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் பயங்கரவாதத்தின் மையமாக மாறியுள்ளது, இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் ஆழ்ந்த கவலையுடன் கூறினார். மேலும் பிரதமர் மோடி, அமைதியை நிலைநாட்ட இந்தியா மேற்கொண்ட எண்ணற்ற, நேர்மையான முயற்சிகளை எடுத்துரைத்தார். லாகூருக்கு அவர் சென்றது முதல் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தானை அழைத்தது வரை, சமரசத்திற்கான ஒவ்வொரு முயற்சியும் விரோதத்தை சந்தித்தது. பாகிஸ்தான் மக்கள் வன்முறை மற்றும் பயம் இல்லாத எதிர்காலத்திற்கு தகுதியானவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், பாகிஸ்தான் தனது தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தம் விருப்பத்தை முன்வைத்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளில் சிறந்ததை தேர்ந்தெடுப்பதில் பிரதமர் மோடி ஒரு தனித்துவமான பதிலைக் குறிப்பிடுகிறார்

இந்தியா அல்லது பாகிஸ்தான் எந்த நாடு சிறந்த கிரிக்கெட் அணியைக் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்குதீர்ப்பளிக்க தாம் ஒரு நிபுணர் அல்ல என்று பிரதமர் மோடி இலகுவாக பதிலளித்தார், ஆனால் இரு அணிகளுக்கும் இடையிலான சமீபத்திய போட்டி முடிவுகள் பதிலை வழங்கக்கூடும் என்று தெரிவித்தார். (ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்ததைக் குறிப்பிடும் போது)

கால்பந்து வீரராக மரடோனாவை தேர்வு செய்த பிரதமர் மோடி: இந்தியாவின் மினி  பிரேசிலுக்கு புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி, பாராட்டு மற்றும் ஏக்க உணர்வுடன், டியாகோ மரடோனாவை தனக்கு பிடித்த கால்பந்து வீரர் என்று பெயரிட்டார், தலைசிறந்த வீரரின் ஒப்பிடமுடியாத திறமை, மெய்சிலிர்க்கும் ஆர்வம் மற்றும் விளையாட்டில் ஆழமான செல்வாக்கு ஆகியவற்றை நினைவு கூர்ந்தார்.

மனதைத் தொடும் அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோலுக்கு தாம் சென்றபோது, பழங்குடியினர் வாழும் மக்களிடையே கால்பந்து மீதான அசாதாரண ஈர்ப்பைக் கண்டதாகவும் கூறினார். ஆழ்ந்த பாராட்டு உணர்வுடன், உள்ளூர்வாசிகள் தங்கள் பிராந்தியத்தை மினி பிரேசில்என்று பெருமையுடன் குறிப்பிட்டதை அவர் விவரித்தார் – இது அவர்களின் கலாச்சாரத்தில் விளையாட்டின் ஆழமான வேர்களுக்கு ஒரு சான்றாகும். இந்த உற்சாகம் இந்தியாவில் விளையாட்டின் வளர்ச்சியைத் தூண்டும் சக்தியைக் கொண்டுள்ளது, எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

21-ஆம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டு என்று பிரதமர் மோடி வர்ணித்தார்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார தொடர்பை எடுத்துரைத்த பிரதமர் நரேந்திர மோடி, ஒரு குடும்பத்திற்குள் இருப்பதைப் போலவே வேறுபாடுகளும் உள்ளன என்பதை ஒப்புக் கொண்டார். எவ்வாறாயினும், இந்த வேறுபாடுகள் சர்ச்சைகளாக அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை நிர்வகிப்பதில் பேச்சுவார்த்தை முதன்மை அணுகுமுறையாக உள்ளது என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். எல்லையில் நிலைமைகள் இயல்பாக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். நாடுகளுக்கிடையிலான போட்டி இயற்கையானது என்றாலும், அமைதி மற்றும் முன்னேற்றத்தை பராமரிக்க மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் மேலும் கூறினார். 21 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்றும், இந்தியா மற்றும் சீனா இடையேயான நல்லுறவு நன்மை பயப்பது  மட்டுமல்ல, உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

தேச நலனுக்கு எதிரான பிரச்சாரத்துடன் செயல்படுபவர்களுக்கு பிரதமர் மோடியின் பதில்

பொது விவாதங்களில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் குறைந்து வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார், அர்த்தமுள்ள விவாதம் ஆராய்ச்சி அல்லது உண்மைகள் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் மாற்றப்படுகிறது என்று கூறினார். விமர்சனங்கள், தர்க்கம் மற்றும் ஆதாரங்களால் ஆதரிக்கப்படும்போது, கொள்கைகளை வடிவமைப்பதிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். எவ்வாறாயினும், சிந்தனைமிக்க பகுப்பாய்வில் ஈடுபடுவதற்குப் பதிலாக, பலர் மறைக்கப்பட்ட பிரச்சாரங்களுடன் உண்மையை சரிபார்க்க எந்த முயற்சியும் செய்யாமல் சீரற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறுக்குவழிகளை நாடுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

நன்கு இயக்கப்பட்ட மற்றும் குறிப்பிட்ட விமர்சனங்கள் பயனுள்ள கொள்கை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். எவ்வாறாயினும், சில தனிநபர்கள் குறிப்பிட்ட திட்டங்கள்  மற்றும் தவறான நோக்கத்துடன் செயல்படுகிறார்கள், தவறான தகவல்களை மக்களை தவறாக வழிநடத்துவதற்கான கருவியாக பயன்படுத்துகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கான உலகின் முயற்சிகள் இந்தியா இல்லாமல் முழுமையடையாது என்பதை பிரதமர் மோடி விளக்கினார்

செயற்கை நுண்ணறிவில் உலகம் எவ்வளவு முன்னேறினாலும், இந்தியா இல்லாமல் அது முழுமையடையாது என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு என்பது அடிப்படையில் ஒத்துழைப்பு பற்றியது என்றும், அதன் வளர்ச்சிக்கு இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளுக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு கருவிகளை உருவாக்குகிறது. இந்தியாவின் சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை திறன்கள் உலகளவில் போட்டியிடக்கூடியவை என்பதை சுட்டிக்காட்டிய அவர், இது செயற்கை நுண்ணறிவு புரட்சியில் நாட்டை ஒரு முக்கிய செயற்பாட்டாளராக ஆக்குகிறது என்று கூறினார்.

செயற்கை நுண்ணறிவு Vs மனித நுண்ணறிவு குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்

வரலாறு முழுவதும், தொழில்நுட்பம் பெரும்பாலும் மனிதகுலத்தின் மிகப்பெரிய சவாலாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். இருப்பினும், ஒவ்வொரு முறையும், தொழில்நுட்பம் மற்றும் மனிதநேயம் இரண்டும் முன்னேறியுள்ளன, மனிதர்கள் எப்போதும் ஒரு படி மேலே இருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு, ஆற்றல் வாய்ந்தது என்றாலும், அது மனித கற்பனையின் ஆழத்துடன் ஒருபோதும் பொருந்தாது என்று அவர் வலியுறுத்தினார்.

மக்கள் சேவையில் தனது ஈடுபாட்டை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் மீதான தனது ஆழ்ந்த பொறுப்புணர்வைப் பற்றி பேசினார், தனது அரசியல் பயணம் முழுவதும்  பொதுமக்களின் நம்பிக்கை தனக்கு மிகப்பெரிய வலிமை அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார். தான் அரசியலில் நுழைந்த நாள் முதல் மக்களை தெய்வீகமானவர்களாகக் கருதுவதாகவும், தன் மீதான நம்பிக்கை ஒருபோதும் உடைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாகவும் பிரதமர் கூறினார்.

ஒரு இதயப்பூர்வமான ஒப்புமையை சுட்டிக்காட்டி, புனிதக் கடமைகளைச் செய்யும் ஒரு பக்தனின்  சேவையுடன் தனது சேவையை ஒப்பிட்டார். ஒரு மதகுரு  கடவுளை தளராத பக்தியுடன் வழிபடுவதைப் போலவே, அவர் மக்களிடையே அதே நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் அவர்களுக்கு சேவை செய்கிறார் என்றும்  கூறினார்.

உலகின் சக்திவாய்ந்த தலைவர் என்று அழைக்கப்படுவதற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தன்னை ஒரு பிரதம சேவகர்என்று கருதுவதாகக் கூறி, பொது சேவைக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். அதிகாரம் ஒருபோதும் தனது தேடலாக இருந்ததில்லை என்றும், அரசியல் அதிகார விளையாட்டுகளில் அவர் ஒருபோதும் ஈடுபடவில்லை என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மாறாக, அவரது கவனம் எப்போதும் மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் அர்த்தமுள்ள வேலையில் உள்ளது, என்றார்.

ஆளுகை குறித்த தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன், தனது குறிக்கோள் உழைப்புக்கு ஆதரவானதாக இருக்க வேண்டுமே தவிர அதிகாரமிக்கதாக அல்ல என்று பிரதமர் கூறினார். உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியது அல்ல, ஆனால் சேவைக்கான அர்ப்பணிப்பைப் பற்றியது, ஒவ்வொரு செயலும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அதன் குடிமக்களின் நல்வாழ்விற்கும் பங்களிப்பதை உறுதி செய்கிறது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

பிரதமர் மோடி தனது சுய மதிப்பீட்டிற்கான மூன்று அளவுகோல்களைக் கூறுகிறார்

பிரதமர் மோடி தன்னை மதிப்பீடு செய்யும் மூன்று அளவுகோல்களை பட்டியலிட்டார். முதலாவதாக, கடின உழைப்பைச் செய்வதிலிருந்து அவர் ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இரண்டாவதாக, அவர் ஒருபோதும் தவறான நோக்கத்துடன் எதையும் செய்வதில்லை. மூன்றாவதாக, அவர் தனக்காக மட்டுமே எதையும் செய்வதில்லை. உண்மையான மனநிறைவு என்பது நீங்கள் எதைப் பெற்று எதை அடைகிறீர்கள் என்பதை விட சமூகத்திற்கு என்ன கொடுக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் சோர்வாக உணர்வாரா? தனது அயராத முயற்சிகளுக்குப் பின்னால் உள்ள உத்வேகத்தை பிரதமர் எடுத்துரைத்தார்

உண்மையான தலைமைத்துவம் கடின உழைப்பு மற்றும் பொறுப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், பெண்கள் மற்றும் தொழிலாளர்களின் இடைவிடாத முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார், ஒரு தலைவராக, தாமும் முழு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார். மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற தம்மை ஊக்குவிக்கிறது என்று பிரதமர் மோடி  தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, தனது முடிவுகளின் பின்னணியில் உள்ள வழிகாட்டும் கொள்கைகளைப்  பகிர்ந்து கொண்டதுடன், தலைமைத்துவத்திற்கான தனது அணுகுமுறையைப் பற்றியும் பேசினார், தனிப்பட்ட இழப்பைப் பற்றி கவலைப்படாமல் தேசத்திற்காக  துணிச்சலான முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதாக கூறினார். இந்தியாவுக்கு ஒரு முடிவு சரியானதாக இருக்கும்போது, முழு நம்பிக்கையுடன், தயக்கமின்றி முன்னேறிச் செல்வதாக அவர் கூறினார். உண்மையான தலைமை, பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் உள்ளது என்பதை  பிரதமர் மோடி எடுத்துரைத்தார். ஒரு தலைவர் தனது செயல்பாட்டிற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் போது, அது இயல்பாகவே அவருடன் பணிபுரிபவர்களிடையே அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டைத் தூண்டுகிறது என்று அவர் விளக்கினார்.

பிரதமரும் ஒரு மனிதர்தான்; அவரும் தவறு செய்யலாம், ஆனால் ஒருபோதும் தவறான நோக்கத்துடன் செய்ய மாட்டார்

தவறுகள் நிகழக்கூடும் என்பதை ஒப்புக் கொண்ட பிரதமர் மோடி, அவர் தவறு செய்தாலும், ஒருபோதும் தவறான நோக்கத்துடன் செயல்பட மாட்டார் என்று  உறுதிப்பட தெரிவித்தார். அவரது ஒவ்வொரு நடவடிக்கையும், தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தால் வழிநடத்தப்படுகிறது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

தேர்வுகள் மாணவர்களின் உண்மையான திறனை வரையறுக்காது என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்

தேர்வுகளை ஒரு மாணவரின் திறனுக்கான இறுதி சோதனையாக பார்க்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம், மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும், அவர்களின் கவலைகளைக் கேட்கவும், கல்வி குறித்த அவர்களின் கண்ணோட்டங்களைப் புரிந்து கொள்ளவும் தனக்கு வாய்ப்பு கிடைத்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கல்வி மதிப்பெண்களால்  மட்டுமே ஒரு மாணவரின் உண்மையான திறன்களை வரையறுக்க முடியாது என்று பிரதமர் வலியுறுத்தினார். அதற்கு பதிலாக, அவர் கற்றலுக்கான ஒரு பரந்த அணுகுமுறையை ஊக்குவித்தார், இது படைப்பாற்றல், ஆர்வம் மற்றும் நிஜ உலக திறன்களை வளர்க்கிறது.

தேர்வுகள் முக்கியமானவை என்றாலும், அவை அறிவு மற்றும் சுய வளர்ச்சியின் பெரிய பயணத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்பதை பிரதமர் மாணவர்களுக்கு நினைவூட்டினார்.

மரண பயம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பிரதமர் மோடியின் பதில்

மரணத்தின் நிச்சயத்தன்மையை  சுட்டிக்காட்டிய  பிரதமர் நரேந்திர மோடி, அதைக் கண்டு பயப்படுவதற்குப் பதிலாக, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மரணம் தவிர்க்க முடியாதது என்றாலும், வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதுதான் முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மக்கள் கவலையில் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றும், தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும், உலகிற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கவும் தங்களது சக்தியை செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வாழ்க்கை நிச்சயமற்றது என்பதால், ஒவ்வொரு கணத்தையும் நோக்கம், கற்றல் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக செலவிட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

லெக்ஸ் ஃப்ரிட்மேன் மற்றும் பிரதமர் மோடி காயத்ரி மந்திரத்தின் ஆழமான முக்கியத்துவத்தைப் பற்றி விவாதித்தனர்

பாட்காஸ்டின் போது, லெக்ஸ் ஃப்ரிட்மேன் காயத்ரி மந்திரத்தை ஓதி, பிரதமர் நரேந்திர மோடியிடம் தனது உச்சரிப்பு சரியாக இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமர் தாமே மந்திரத்தை ஓதி, அதன் ஆழமான முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார். காயத்ரி மந்திரம், சூரிய உபாசனையில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும், அது ஒரு ஆழமான ஆன்மீக சாரத்தைக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் மோடி விளக்கினார். ஒவ்வொரு மந்திரமும் வெறும் சொற்களின் தொகுப்பு மட்டுமல்ல, வாழ்க்கை மற்றும் பிரபஞ்சத்தின் பல்வேறு அம்சங்களைப் பிரதிபலிக்கும் ஒரு அறிவியல் தொடர்பைக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் மேலும் எடுத்துரைத்தார். பண்டைய இந்திய மரபுகள் ஆன்மீகத்தையும் அறிவியலையும் தடையின்றி இணைத்து, மனிதகுலத்திற்கு காலத்தால் அழியாத ஞானத்தை வழங்குகின்றன என்பதை அவர் வலியுறுத்தினார்.

***

(Release ID: 2111673)

AD/PLM/BR/KR