புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற டிவி 9 உச்சிமாநாடு 2025-இல் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், டிவி9 இன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அதன் நேயர்களுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். டிவி9 பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், இப்போது உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர் என்றார். இந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் இணைந்த இந்திய வம்சாவளியினரை அவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
“இன்று, உலகத்தின் கண்கள் இந்தியாவின் மீது உள்ளன” என்று குறிப்பிட்ட பிரதமர், உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தியா மீது ஆர்வமாக உள்ளனர் என்பதை எடுத்துரைத்தார். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் 11-வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, 7-8 ஆண்டு காலப்பகுதியில் 5-வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சர்வதேச நிதியத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டிய திரு மோடி, கடந்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்கிய ஒரே பெரிய பொருளாதாரம் இந்தியா மட்டுமே என்று கூறினார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியா தனது பொருளாதாரத்தில் இரண்டு லட்சம் கோடி அமெரிக்க டாலர்களைச் சேர்த்துள்ளது என்பதை வலியுறுத்திய அவர், மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்குவது என்பது வெறும் எண்ணிக்கை சார்ந்தது அல்ல, ஆனால் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றுவது போன்ற பெரிய தாக்கங்களை அது ஏற்படுத்தியது. புதிய நடுத்தர வர்க்கத்தினர், பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்து அதை துடிப்பானதாக மாற்றுவதோடு கனவுகள் மற்றும் அபிலாஷைகளுடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். “உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா” என்று கூறிய பிரதமர், இளைஞர்கள் வேகமாக திறன் பெற்று வருவதாகவும், அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். “இந்தியா முதலில் என்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தாரக மந்திரமாக மாறியுள்ளது” என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியா ஒரு காலத்தில் அனைத்து நாடுகளிடமிருந்தும் சமமான தூரத்தை பராமரிக்கும் கொள்கையைப் பின்பற்றிய நிலையில், தற்போதைய “சம-நெருக்கம்” கொள்கை அணுகுமுறை, அனைவருடனும் சமமாக நெருக்கமாக இருப்பதை வலியுறுத்துகிறது. இந்தியாவின் கருத்துக்கள், புதுமைகள் மற்றும் முயற்சிகளை உலக சமுதாயம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மதிக்கிறது என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். உலகம் இந்தியாவை இன்று உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், “இந்தியா என்ன நினைக்கிறது” என்பதை புரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலக ஒழுங்கில் இந்தியா பங்கேற்பது மட்டும் அல்லாமல், எதிர்காலத்தை வடிவமைப்பதிலும், பாதுகாப்பதிலும் தீவிரமாக பங்களித்து வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். உலகளாவிய பாதுகாப்பில், குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்றின் போது இந்தியாவின் முக்கிய பங்கு குறித்து அவர் குறிப்பிட்டார். சந்தேகங்களை மீறி, இந்தியா தனது சொந்த தடுப்பூசிகளை உருவாக்கியது, விரைவான தடுப்பூசியை உறுதி செய்தது மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை வழங்கியது. உலகளாவிய நெருக்கடி காலங்களில், இந்தியாவின் சேவை மற்றும் இரக்க மதிப்புகள் உலகம் முழுவதும் எதிரொலித்து, அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தை வெளிப்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகச் சூழலை பிரதிபலிக்கும் வகையில், பெரும்பாலான சர்வதேச அமைப்புகள் ஒரு சில நாடுகளின் மேலாதிக்கத்தை எவ்வாறு மேற்கொள்கின்றன என்பதைக் குறிப்பிட்ட திரு மோடி, இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் ஏகபோகத்தை விட மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும், உள்ளடக்கிய மற்றும் பங்கேற்பு கொண்ட உலகளாவிய ஒழுங்கிற்காக பாடுபடுகிறது என்றும் குறிப்பிட்டார். இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, 21-ஆம் நூற்றாண்டுக்கான உலகளாவிய நிறுவனங்களை உருவாக்குவதிலும், கூட்டுப் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பை உறுதி செய்வதிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்றும் அவர் கூறினார். உலகெங்கிலும் கட்டமைப்புக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் இயற்கை பேரழிவுகளின் சவாலை எதிர்கொண்டு, பேரழிவுகளைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியை (சி.டி.ஆர்.ஐ) உருவாக்க இந்தியா முன்முயற்சி எடுத்தது என்று திரு மோடி குறிப்பிட்டார். பேரிடர் தயார்நிலை மற்றும் விரிதிறனை வலுப்படுத்துவதற்கான உலகளாவிய உறுதிப்பாட்டை சி.டி.ஆர்.ஐ பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் கூறினார். பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள் மற்றும் மின் கட்டமைப்புகள் உள்ளிட்ட பேரழிவு-நெகிழ்திறன் உள்கட்டமைப்புகளை நிர்மாணிப்பதை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார், அவை இயற்கை பேரழிவுகளைத் தாங்குவதையும், உலகெங்கிலும் உள்ள சமூகங்களைப் பாதுகாப்பதையும் உறுதி செய்கின்றன.
எதிர்கால சவால்களை, குறிப்பாக, எரிசக்தி ஆதாரங்களில் எதிர்கொள்ள உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, மிகச்சிறிய நாடுகளுக்குக் கூட நீடித்த எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதற்கு சர்வதேச சூரியசக்தி கூட்டணி (ஐ.எஸ்.ஏ) என்ற இந்தியாவின் முன்முயற்சியை எடுத்துரைத்தார். இந்த முயற்சி காலநிலையை நேர்மறையாக பாதிப்பது மட்டுமல்லாமல், உலகளாவிய தெற்கு நாடுகளின் எரிசக்தி தேவைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சியில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்திருப்பதை அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து பிரச்சினைகளின் உலகளாவிய சவால்கள் குறித்துப் பேசிய திரு மோடி, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐ.எம்.இ.சி) உள்ளிட்ட புதிய முன்முயற்சிகளை தொடங்குவதில் உலக நாடுகளுடன் இந்தியாவின் கூட்டு முயற்சிகளை எடுத்துரைத்தார். இந்தத் திட்டம் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கை வர்த்தகம் மற்றும் இணைப்பு மூலம் இணைக்கும், பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் மற்றும் மாற்று வர்த்தக பாதைகளை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சி உலகளாவிய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
உலக அமைப்புகளை அதிக பங்கேற்பு மற்றும் ஜனநாயகத்தன்மை கொண்டதாக மாற்ற இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், பாரத மண்டபத்தில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் போது ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி-20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக ஆக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை குறித்துக் குறிப்பிட்டார். இந்த நீண்டகால கோரிக்கை இந்தியாவின் தலைமையில் நிறைவேற்றப்பட்டது என்று அவர் வலியுறுத்தினார். சர்வதேச யோகா தினம், பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துரைத்த திரு மோடி, உலகளாவிய முடிவெடுக்கும் நிறுவனங்களில் உலகளாவிய தென் நாடுகளின் குரலாக இந்தியாவின் பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்த முயற்சிகள் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் வலுவான இருப்பை நிறுவியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். “உலகளாவிய தளங்களில் இந்தியாவின் திறன்கள் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுவதால் இது ஒரு ஆரம்பம் மட்டுமே” என்று அவர் மேலும் கூறினார்.
21-ஆம் நூற்றாண்டின் 25 ஆண்டுகள் கடந்துவிட்டன என்றும், அதில் 11 ஆண்டுகள் தனது அரசின் தலைமையின் கீழ் தேசத்திற்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட திரு மோடி, “இந்தியா இன்று என்ன நினைக்கிறது” என்பதைப் புரிந்துகொள்ள கடந்த கால கேள்விகள் மற்றும் பதில்களைப் பிரதிபலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சார்பு நிலையிலிருந்து தற்சார்பு நிலைக்கு மாறியுள்ளதை அவர் எடுத்துரைத்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு, கிராமங்களில் கழிப்பறை பிரச்சினை பெண்களுக்கு குறைந்த வாய்ப்புகளையே விட்டுச் சென்றது, ஆனால் இன்று தூய்மை இந்தியா இயக்கம் ஒரு தீர்வை அளித்துள்ளது என்பதை அவர் நினைவுகூர்ந்தார். 2013-இல் சுகாதாரப் பராமரிப்பு குறித்த விவாதங்கள் அதிக செலவு பிடிக்கும் சிகிச்சைகளைச் சுற்றியே இருந்தன என்றும், ஆனால் இன்று ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு தீர்வை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், ஒரு காலத்தில் புகையுடன் தொடர்புடைய ஏழைகளின் சமையலறைகள் தற்போது உஜ்வாலா திட்டத்தின் மூலம் பயனடைகின்றன என்று அவர் குறிப்பிட்டார். 2013-இல் வங்கிக் கணக்குகள் குறித்துக் கேட்கப்படும் போதெல்லாம் பெண்கள் பெரும்பாலும் அமைதியாக இருந்தனர் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், ஆனால் இன்று, மக்களின் வங்கிக் கணக்குகள் திட்டம் காரணமாக 30 கோடிக்கும் அதிகமான பெண்கள் சொந்தக் கணக்குகளை வைத்துள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். ஒரு காலத்தில் கிணறுகள் மற்றும் குளங்களை நம்பியிருக்க வேண்டிய தேவை இருந்தது, ஆனால் தற்போது இல்லந்தோறும் குடிநீர் திட்டத்தின் மூலம் இத்தகைய போராட்டங்கள் தீர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த தசாப்தம் மட்டும் மாறவில்லை, மக்களின் வாழ்க்கையும் மாறியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் வளர்ச்சி மாதிரியை உலகம் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார். இந்தியா இனி வெறும் ‘கனவுகளின் தேசம்’ அல்ல, மாறாக ‘அதை வழங்கும் நாடு’ என்று அவர் மேலும் கூறினார்.
ஒரு நாடு தனது குடிமக்களின் வசதி மற்றும் நேரத்தை மதிக்கும்போது, அது நாட்டின் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று திரு மோடி கூறினார். இதைத்தான் இந்தியா இன்று அனுபவித்து வருகிறது என்று அவர் எடுத்துரைத்தார். பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு அவர் ஒரு உதாரணத்தை வழங்கினார். முன்னதாக, பாஸ்போர்ட் பெறுவது ஒரு சிக்கலான பணியாக இருந்தது, இதில் நீண்ட காத்திருப்பு நேரங்கள், சிக்கலான ஆவணங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பாஸ்போர்ட் மையங்கள் ஆகியவை அடங்கும், அவை பெரும்பாலும் மாநில தலைநகரங்களில் அமைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த செயல்முறையை முடிக்க சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஒரே இரவில் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது என்று அவர் வலியுறுத்தினார். இந்த சவால்கள் தற்போது முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளன என்று பிரதமர் எடுத்துரைத்தார். நாட்டில் பாஸ்போர்ட் சேவை மையங்களின் எண்ணிக்கை 77 லிருந்து 550 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் பகிர்ந்து கொண்டார். கூடுதலாக, பாஸ்போர்ட் பெறுவதற்கான காத்திருப்பு நேரம் 50 நாட்கள் வரை இருந்தது, இப்போது 5-6 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வங்கித் துறை உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து குறிப்பிட்ட திரு மோடி, 50-60 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு, எளிதில் அணுகக்கூடிய வங்கி சேவைகள் கிடைக்கும் என்ற வாக்குறுதியுடன் இருந்தன, ஆனால் லட்சக்கணக்கான கிராமங்களில் இன்னும் அத்தகைய வசதிகள் இல்லை என்று குறிப்பிட்டார். இந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இணையவழி வங்கிச் சேவை ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இன்று நாட்டில் ஒவ்வொரு 5 கிலோமீட்டர் சுற்றளவிலும் வங்கிச் சேவை வழங்கும் இலக்கு உள்ளது என்றார். அரசு, வங்கி உள்கட்டமைப்பை விரிவுபடுத்தியது மட்டுமின்றி, வங்கி அமைப்பையும் வலுப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். வங்கிகளின் வாராக்கடன் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், அவற்றின் லாபம் ரூ.1.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் இப்போது பொறுப்பேற்க வைக்கப்படுகிறார்கள் என்று கூறிய அவர், அமலாக்க இயக்குநரகம் (இ.டி) ரூ .22,000 கோடிக்கு மேல் மீட்டுள்ளது என்றும், அது யாரிடமிருந்து எடுக்கப்பட்டதோ அவர்களிடம் சட்டப்பூர்வமாக திருப்பித் தரப்படுவதாகவும் பகிர்ந்து கொண்டார்.
திறமையான நிர்வாகத்திற்கு திறமை வழிவகுக்கும் என்று வலியுறுத்திய பிரதமர், குறைந்த நேரத்தில் அதிக சான்றிதழ்கள், குறைந்த ஆதாரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “சிவப்பு கம்பளத்திற்கு” முன்னுரிமை அளிப்பது ஒரு நாட்டின் வளங்களுக்கான மரியாதையை பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 11 ஆண்டுகளாக, இது தனது அரசின் முக்கிய முன்னுரிமையாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
அமைச்சகங்களில் அதிக நபர்களுக்கு இடமளிக்கும் கடந்த கால நடைமுறையைக் குறிப்பிட்ட திரு மோடி, இது பெரும்பாலும் திறமையின்மைக்கு வழிவகுத்தது, தனது அரசு அதன் முதல் பதவிக்காலத்தில், அரசியல் நிர்பந்தங்களுக்கு பதிலாக நாட்டின் வளங்கள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க பல அமைச்சகங்களை இணைத்தது என்பதை எடுத்துரைத்தார். நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் உருவாக்கப்பட்டதை அவர் எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டார். இதேபோல், வெளிநாடு விவகாரங்கள் அமைச்சகம், வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. நீர்வளம் மற்றும் நதி மேம்பாட்டு அமைச்சகத்தை குடிநீர் அமைச்சகத்துடன் இணைத்து ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் முன்னுரிமைகள் மற்றும் வளங்களை திறம்பட பயன்படுத்துவதால் இந்த முடிவுகள் இயக்கப்படுகின்றன என்று அவர் வலியுறுத்தினார்.
விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்தவும், குறைக்கவும் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், காலப்போக்கில் அவற்றின் பொருத்தத்தை இழந்துவிட்ட சுமார் 1,500 காலாவதியான சட்டங்கள் தமது அரசால் நீக்கப்பட்டதாக குறிப்பிட்டார். கூடுதலாக, சுமார் 40,000 இணக்கங்கள் அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகள் இரண்டு குறிப்பிடத்தக்க விளைவுகளை (பொதுமக்களுக்கு துன்புறுத்தலில் இருந்து நிவாரணம் மற்றும் அரசு இயந்திரத்திற்குள் எரிசக்தி சேமிப்பு) அடைந்துள்ளன என்று அவர் வலியுறுத்தினார். சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்திற்கு மற்றொரு உதாரணத்தை பிரதமர் அளித்தார். 30-க்கும் மேற்பட்ட வரிகள் ஒரே வரியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக செயல்முறைகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் கணிசமான சேமிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் ஊடகங்களில் அடிக்கடி வெளியாகும் அரசு கொள்முதல்களில் திறமையின்மை மற்றும் ஊழல் நிலவியதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவே தனது அரசு மின்னணு சந்தை (ஜி.இ.எம்) தளத்தை அறிமுகப்படுத்தியதாகக் கூறினார். அரசுத் துறைகள் இப்போது தங்கள் தேவைகளை இந்த தளத்தில் பட்டியலிடுகின்றன, விற்பனையாளர்கள் ஏலங்களை முன்வைக்கிறார்கள், ஆர்டர்கள் வெளிப்படையாக இறுதி செய்யப்படுகின்றன என்று அவர் விளக்கினார். இந்த முயற்சி ஊழலை கணிசமாகக் குறைத்து, ரூ .1 லட்சம் கோடிக்கு மேல் அரசிற்கு மிச்சப்படுத்தியுள்ளது. இந்தியாவின் நேரடி பலன் பரிமாற்ற முறைக்கு உலக அளவில் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான வரி செலுத்துவோரின் பணம் தவறான கைகளுக்கு செல்வதை நேரடி மானியத் தொழில்நுட்பம் தடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அரசின் திட்டங்களை சுரண்டிய தனிநபர்கள் உட்பட 10 கோடிக்கும் அதிகமான போலி பயனாளிகள் அதிகாரப்பூர்வ பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு வரி செலுத்துவோரின் பங்களிப்பையும் நேர்மையாகப் பயன்படுத்துவதில் அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய திரு மோடி, வரி செலுத்துவோருக்கு அது அளிக்கும் மரியாதை ஆகியவற்றைக் குறிப்பிட்டு, வரி முறை, வரி செலுத்துவோருக்கு உகந்ததாக மாற்றப்பட்டுள்ளது என்றார். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது மிகவும் எளிமையாகவும், வேகமாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். முன்பு, பட்டயக் கணக்காளரின் உதவியின்றி வருமான வரி தாக்கல் செய்வது சவாலாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். இன்று, தனிநபர்கள் தங்கள் ஐ.டி.ஆர்- ஐ குறுகிய காலத்திற்குள் இணையவழியில் தாக்கல் செய்யலாம், மேலும் தாக்கல் செய்த நாட்களுக்குள் பணத்தைத் திரும்பப் பெறுதல் அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். முகமற்ற மதிப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையும் பிரதமர் எடுத்துரைத்தார், இது வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் தொந்தரவுகளை கணிசமாகக் குறைத்துள்ளது. இதுபோன்ற திறமையான நிர்வாக சீர்திருத்தங்கள் உலகிற்கு ஒரு புதிய நிர்வாக மாதிரியை வழங்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 10-11 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும், இந்தியா அடைந்துள்ள மாற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், மனப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார். சுதந்திரம் அடைந்த பிறகு, பல தசாப்தங்களாக, வெளிநாட்டுப் பொருட்களை உயர்ந்ததாகக் கருதும் மனப்பான்மை இந்தியாவில் ஊக்குவிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். பொருட்களை விற்கும் போது கடைக்காரர்கள் பெரும்பாலும் “இது இறக்குமதி செய்யப்பட்டது!” என்று தொடங்குவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிலை தற்போது மாறியுள்ளது என்றும், “இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா?” என்று மக்கள் கேட்கிறார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உற்பத்தித் துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, நாட்டின் முதலாவது உள்நாட்டு எம்.ஆர்.ஐ இயந்திரத்தை உருவாக்கிய சமீபத்திய சாதனையை வலியுறுத்தினார். இந்த மைல்கல் இந்தியாவில் மருத்துவ நோயறிதலுக்கான செலவைக் கணிசமாகக் குறைக்கும் என்றார். ‘தற்சார்பு இந்தியா’ மற்றும் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ முன்முயற்சிகளின் உருமாறும் தாக்கத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார், அவை உற்பத்தித் துறையில் புதிய சக்தியை உட்செலுத்தியுள்ளன. ஒரு காலத்தில் உலகம் இந்தியாவை உலகச் சந்தையாகப் பார்த்த நிலையில், தற்போது அந்நாட்டை ஒரு பெரிய உற்பத்தி மையமாக அங்கீகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் செல்பேசி துறையின் வெற்றியை சுட்டிக்காட்டிய பிரதமர், 2014-15-ல் ஒரு பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்த ஏற்றுமதி, 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்றார். உலகளாவிய தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் துறையில் இந்தியா ஒரு ஆற்றல் மையமாக உருவெடுத்து வருவதை அவர் எடுத்துரைத்தார். வாகனத் துறை பற்றி விவாதித்த பிரதமர், உதிரி பாகங்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் நற்பெயர் வளர்ந்து வருவது குறித்து குறிப்பிட்டார். இந்தியா முன்பு அதிக அளவில் மோட்டார் சைக்கிள் பாகங்களை இறக்குமதி செய்த நிலையில், இன்று இந்தியாவில் தயாரிக்கப்படும் பாகங்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளை சென்றடைகின்றன என்று அவர் குறிப்பிட்டார். சூரிய மின்சக்தித் துறையின் சாதனைகளை எடுத்துரைத்த திரு மோடி, சூரிய மின்கலங்கள் மற்றும் தொகுதிகளின் இறக்குமதி குறைந்துள்ளது, அதே நேரத்தில் ஏற்றுமதி 23 மடங்கு அதிகரித்துள்ளது என்றார். பாதுகாப்பு ஏற்றுமதியின் வளர்ச்சியை அவர் மேலும் வலியுறுத்தினார், இது கடந்த தசாப்தத்தில் 21 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சாதனைகள் இந்தியாவின் உற்பத்திப் பொருளாதாரத்தின் வலிமையையும், பல்வேறு துறைகளில் புதிய வேலைகளை உருவாக்கும் அதன் திறனையும் வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.
டிவி9 உச்சிமாநாட்டின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், நடைபெறவுள்ள பல்வேறு தலைப்புகளில் விரிவான விவாதங்களை வலியுறுத்தினார். உச்சிமாநாட்டின் போது பகிரப்பட்ட யோசனைகள் மற்றும் தொலைநோக்குகள் நாட்டின் எதிர்காலத்தை வரையறுக்கும் என்று அவர் எடுத்துரைத்தார். புதிய சக்தியுடன் சுதந்திரத்தை நோக்கிய புதிய பயணத்தை இந்தியா தொடங்கிய கடந்த நூற்றாண்டின் முக்கிய தருணத்தை அவர் நினைவு கூர்ந்தார். 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இந்தியா அடைந்த சாதனையைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த தசாப்தத்தில் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இந்த தொலைநோக்குப் பார்வையை அடைய கூட்டு முயற்சிகள் அவசியம் என்று செங்கோட்டையில் இருந்து தான் வெளியிட்ட அறிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக டிவி9 நிறுவனத்தைப் பாராட்டிய பிரதமர், அவர்களின் நேர்மறையான முன்முயற்சியை அங்கீகரித்ததோடு, உச்சிமாநாட்டின் வெற்றிக்கு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபடுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்ததற்காக டிவி9 நெட்வொர்க்கிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். 2047-ஆம் ஆண்டில் வளர்ந்த பாரதம் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகளாக இளைஞர்கள் இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
***
RB /DL
Speaking at the TV9 Summit. @TV9Bharatvarsh https://t.co/PtIYS213F8
— Narendra Modi (@narendramodi) March 28, 2025
Today, the world's eyes are on India. pic.twitter.com/XEeYl0xMm8
— PMO India (@PMOIndia) March 28, 2025
India's youth is rapidly becoming skilled and driving innovation forward. pic.twitter.com/7VfUZnbtfh
— PMO India (@PMOIndia) March 28, 2025
"India First" has become the mantra of India's foreign policy. pic.twitter.com/qItDALoemT
— PMO India (@PMOIndia) March 28, 2025
Today, India is not just participating in the world order but also contributing to shaping and securing the future. pic.twitter.com/IhkUnN8Kvx
— PMO India (@PMOIndia) March 28, 2025
Prioritising humanity over monopoly. pic.twitter.com/gjGSreaQHY
— PMO India (@PMOIndia) March 28, 2025
Today, India is not just a Nation of Dreams but also a Nation That Delivers. pic.twitter.com/Px1fWPVTUA
— PMO India (@PMOIndia) March 28, 2025
TV9 Summit में देश के होनहार फुटबॉलर्स से मिलने का सौभाग्य मिला। मैं उनके उज्ज्वल भविष्य की कामना करता हूं। pic.twitter.com/lwCyNiVzF5
— Narendra Modi (@narendramodi) March 28, 2025
भारत दुनिया की एकमात्र मेजर इकोनॉमी है, जिसने 10 वर्षों में अपने GDP को डबल किया है। इसका Impact देखिए... pic.twitter.com/4ibIdp6Gwk
— Narendra Modi (@narendramodi) March 28, 2025
भारत ने मोनोपोली नहीं, बल्कि मानवता को सर्वोपरि रखा। इसीलिए ग्लोबल प्लेटफॉर्म पर आज हमारे देश का सामर्थ्य नई ऊंचाई की तरफ बढ़ रहा है। pic.twitter.com/lMvqGMvw6P
— Narendra Modi (@narendramodi) March 28, 2025
आज हमारा भारत सिर्फ Nation of Dreams नहीं, बल्कि Nation That Delivers भी है। pic.twitter.com/bLOwdsiDrO
— Narendra Modi (@narendramodi) March 28, 2025
पासपोर्ट और बैंकिंग सहित कई सेक्टर में हमारे रिफॉर्म से आज हर देशवासी यह महसूस कर रहा है कि हमने उनकी सुविधा और समय को कितनी प्राथमिकता दी है। pic.twitter.com/X2rRfWKOci
— Narendra Modi (@narendramodi) March 28, 2025
हमने Efficiency से गवर्नमेंट को ज्यादा Effective बनाया है, जिसने दुनिया को भी गवर्नेंस का एक नया मॉडल दिया है। pic.twitter.com/mBNgsbfc4N
— Narendra Modi (@narendramodi) March 28, 2025
आत्मनिर्भर भारत और मेक इन इंडिया अभियान ने देश के मैन्युफैक्चरिंग सेक्टर को एक नई ऊर्जा दी है, जिससे बड़े पैमाने पर नई जॉब्स भी क्रिएट हो रही हैं। pic.twitter.com/qDje4caP0p
— Narendra Modi (@narendramodi) March 28, 2025