இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மஹா கும்பாஹிஷேகத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் தமது கருத்துக்களை தெரிவித்தார். அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, முருகன் கோவில் அறக்கட்டளையின் தலைவர் பா ஹாஷிம், நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோபாலன், தமிழகம் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆச்சார்யர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்கும் தமது அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்திய திரு மோடி, அதிபர் பிரபோவோவின் பிரசன்னம் இந்த நிகழ்வை தமக்கு மேலும் சிறப்பானதாக்கியது என்று குறிப்பிட்டார். ஜகார்த்தாவில் இருந்து உடல் ரீதியாக தொலைவில் இருந்தாலும், வலுவான இந்தியா-இந்தோனேசியா உறவை பிரதிபலிக்கும் வகையில், அந்த நிகழ்வை உணர்வுபூர்வமாக நெருக்கமாக உணர்ந்ததாக பிரதமர் கூறினார். அதிபர் பிரபோவோ சமீபத்தில் 140 கோடி இந்தியர்களின் அன்பை இந்தோனேசியாவிற்கு கொண்டு சென்றார் என்றும், அவர் மூலம் இந்தோனேசியாவில் உள்ள அனைவரும் ஒவ்வொரு இந்தியரின் நல்வாழ்த்துக்களை உணர முடியும் என்றும் அவர் கூறினார். ஜகார்த்தா கோவிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தோனேசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள முருகப்பெருமானின் அனைத்து பக்தர்களுக்கும் அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். திருப்புகழ் பாடல்கள் மூலம் முருகப்பெருமான் தொடர்ந்து போற்றப்பட வேண்டும் என்றும், ஸ்கந்த ஷஷ்டி கவசம் மந்திரங்கள் மூலம் அனைத்து மக்களையும் காக்க வேண்டும் என்றும் பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.
“இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான உறவு புவி-அரசியல் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பகிரப்பட்ட கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் வேரூன்றியுள்ளது” என்று பிரதமர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு பாரம்பரியம், அறிவியல், நம்பிக்கை, பகிரப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் அடிப்படையிலானது என்று அவர் வலியுறுத்தினார். இந்த இணைப்பில் முருகன், ராமர் மற்றும் புத்தர் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இந்தோனேசியாவில் உள்ள பிரம்பனன் கோயிலுக்குச் சென்றால், அவர்கள் காசி மற்றும் கேதார்நாத்தில் உள்ள அதே ஆன்மீக உணர்வை அனுபவிப்பதாக அவர் எடுத்துரைத்தார். இந்தியாவில் உள்ள வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம் மற்றும் ராமசரித்மனாஸ் போன்ற உணர்வுகளை காகவின் மற்றும் செரத் ராமாயணத்தின் கதைகள் தூண்டுவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் அயோத்தியிலும் இந்தோனேசிய ராமலீலா நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாலி மொழியில் “ஓம் ஸ்வஸ்தி-அஸ்து” என்று கேட்பது, இந்தியாவில் வேத அறிஞர்களின் ஆசீர்வாதங்களை இந்தியர்களுக்கு நினைவூட்டுவதாக திரு மோடி கூறினார். இந்தோனேசியாவில் உள்ள போரோபுதூர் ஸ்தூபி இந்தியாவில் உள்ள சாரநாத் மற்றும் போத்கயாவில் காணப்படும் புத்தபெருமானின் அதே போதனைகளை பிரதிபலிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஒரு காலத்தில் இந்தியாவையும் இந்தோனேசியாவையும் கலாச்சார ரீதியாகவும் வணிக ரீதியாகவும் இணைத்த பண்டைய கடல் பயணங்களை ஒடிசாவில் பாலி ஜாத்ரா திருவிழா கொண்டாடுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்றும் கூட, இந்தியர்கள் கருடா இந்தோனேசியா ஏர்லைன்ஸில் பயணம் செய்யும் போது, அவர்கள் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தைப் பார்க்கிறார்கள் என்று அவர் கூறினார்.
இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவு பல வலுவான இழைகளால் பின்னப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். அதிபர் பிரபோவோவின் சமீபத்திய இந்திய பயணத்தின் போது, இந்தப் பகிரப்பட்ட பாரம்பரியத்தின் பல அம்சங்களை அவர்கள் போற்றியதாக அவர் குறிப்பிட்டார். ஜகார்த்தாவில் உள்ள புதிய பிரமாண்ட முருகன் கோவில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்திற்கு ஒரு புதிய தங்க அத்தியாயத்தை சேர்க்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த ஆலயம் நம்பிக்கை மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு புதிய மையமாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜகார்த்தாவில் உள்ள முருகன் கோவிலில் முருகன் மட்டுமின்றி பல்வேறு தெய்வங்களும் உள்ளன என்று குறிப்பிட்ட மோடி, இந்த பன்முகத்தன்மையும் பன்மையும் நமது கலாச்சாரத்தின் அடித்தளமாக அமைகிறது என்று வலியுறுத்தினார். இந்தோனேசியாவில், இந்த பன்முகத்தன்மையின் பாரம்பரியம் “பின்னேகா துங்கல் இகா” என்றும், இந்தியாவில் இது “வேற்றுமையில் ஒற்றுமை” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதுதான் இந்தோனேசியாவிலும் இந்தியாவிலும் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்கள் இத்தகைய நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குக் காரணம் என்று பிரதமர் எடுத்துரைத்தார். வேற்றுமையில் ஒற்றுமையை கடைப்பிடிக்க இந்த புனித நாள் நம்மை ஊக்குவிக்கிறது என்று கூறினார்.
“கலாச்சார விழுமியங்கள், பாரம்பரியம் மற்றும் மரபு ஆகியவை இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே மக்கள்-மக்கள் தொடர்புகளை மேம்படுத்துகின்றன” என்று திரு மோடி கூறினார். பிரம்பனன் கோயிலைப் பாதுகாப்பதற்கான கூட்டு முடிவு மற்றும் போரோபுதூர் புத்த கோயிலுக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். அயோத்தியில் இந்தோனேசிய ராமலீலாவைக் குறிப்பிட்ட அவர், மேலும் இதுபோன்ற திட்டங்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதிபர் பிரபோவோவுடன், அவர்கள் இந்த திசையில் விரைவாக முன்னேறுவார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த காலம் பொன்னான எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிபர் பிரபோவோவுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, மகா கும்பாபிஷேகத்திற்கு அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு அவர் தமது உரையை நிறைவு செய்தார்.
***
PKV/KV
My remarks during Maha Kumbabhishegam of Shri Sanathana Dharma Aalayam in Jakarta, Indonesia. https://t.co/7LduaO6yaD
— Narendra Modi (@narendramodi) February 2, 2025