பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-கனடா நாடுகள் இணைந்து இரண்டு நினைவு அஞ்சல் தலைகளை வெளியிடுவதற்கு பரஸ்பரம் ஒப்புக் கொண்ட தகவல் எடுத்துரைக்கப்பட்டது. “தீபாவளி” என்ற கருத்துரு அடிப்படையில், அஞ்சல் தலைகள் வெளியிடப்படும். இந்த அஞ்சல் தலைகள், செப்டம்பர் 21, 2017-ல் வெளியிடப்பட உள்ளது. இந்த கூட்டு நடவடிக்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய அஞ்சல் துறைக்கும், கனடா அஞ்சல் துறைக்கும் இடையே ஏற்கனவே கையெழுத்தானது.
இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே நீண்டகாலமாகவே நெருங்கிய நல்லுறவு நீடித்து வருகிறது. ஜனநாயகம், பன்முகத்தன்மை, அனைவருக்கும் சமமான வாய்ப்பு, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில், இரு நாடுகளும் ஒத்த தன்மை கொண்டவை. இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான வலுவான தொடர்பு மற்றும் கனடாவில் அதிக அளவில் உள்ள இந்திய வம்சாவளியினர் ஆகியவை, நல்லுறவுக்கு வலுவான அடித்தளத்தை அளித்துள்ளது.
இரு நாடுகளிலும் ஒரே மாதிரியாக உள்ள கலாச்சார கருத்துரு அடிப்படையிலும், கனடாவில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்துவருவதையும் கருத்தில்கொண்டு தீபாவளி என்ற கருத்துரு தேர்வுசெய்யப்பட்டுள்ளது.