Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2023 ஆகஸ்ட் 10 அன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,

கடந்த மூன்று நாட்களாக மாண்புமிகு மூத்த உறுப்பினர்கள் பலர் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர். ஏறத்தாழ அனைவரது கருத்துக்களும் எனக்கு விரிவாகக் கிடைத்துள்ளன. சிலரின் பேச்சுக்களை நானும் கேட்டேன். மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே, இன்று, எங்கள் அரசின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை காட்டியதற்காக இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். அவைத் தலைவர் அவர்களே, கடவுள் மிகவும் அன்பானவர். அவர் தமது எண்ணங்களை யாராவது ஒருவர் மூலமாக நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. கடவுளின் விருப்பப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சி மூலமாக கடவுளின் ஆசிர்வாதத்துடன் வந்திருப்பதாக நான் கருதுகிறேன். 2018-ல் கடவுளின் கட்டளைப்படி எனக்கு எதிராக எதிர்க்கட்சி நண்பர்களால் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அப்போது அதனை எங்கள் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல. அது அவையில் அறிமுகம் செய்தவர்களுக்கானது என்று நான் குறிப்பிட்டேன். 2019 ஆம் ஆண்டில் நாங்கள் தேர்தலைச் சந்தித்தபோது, மக்கள் அவர்கள் மீது மிகுந்த பலத்துடன் நம்பிக்கை இல்லை என்று அறிவித்தனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி, பிஜேபி ஆகிய இரண்டும் அதிக இடங்களை வென்றன. இப்போதும், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் அரசுக்கு அதிர்ஷ்டமானதுதான். தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பிஜேபியும் அனைத்து சாதனைகளையும் முறியடித்து மக்களின் ஆசீர்வாதத்துடன் 2024-ல் மகத்தான வெற்றி பெறும்.

மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் உரிய கவனத்துடன் பங்கேற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடந்த சில நாட்களில் முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த முக்கியமான மசோதாக்களைவிட அரசியலுக்கு முன்னுரிமை அளித்த எதிர்க்கட்சிகளால் அவை விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். மீனவர்கள், தரவுகள், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பழங்குடிமக்கள் தொடர்பான பல மசோதாக்கள் அவற்றில் இருந்தன, ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அவற்றில் ஆர்வம் இல்லை. இது மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம். அவர்களைப் பொறுத்தவரை, கட்சி நாட்டிற்கு மேலானது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். எதிர்க்கட்சிகளை நாடு கவனித்து வருகிறது. அவர்கள் எப்போதும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,

ஒரு தேசம் பழைய தளைகளில் இருந்து விடுபட்டு புதிய ஆற்றலுடனும், உறுதியுடனும் முன்னேறும் காலம் வருகிறது. 21 ஆம் நூற்றாண்டின் இந்தக் காலகட்டம் நமது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் காலமாகும். இந்தக் காலக்கட்டத்தில் என்ன வடிவமைக்கப்படுகிறதோ அது அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நமக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது, நாட்டின் வளர்ச்சி மற்றும் நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க முழு அர்ப்பணிப்பு என்ற ஒற்றைக் கவனம் இருக்க வேண்டும். நமது மக்களின் மற்றும் இளைஞர்களின் பலம் நம்மை இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும்.

ஊழல் இல்லாத ஆட்சியை இந்திய இளைஞர்களுக்கு நாங்கள் கொடுத்துள்ளோம். அவர்களுக்கு தைரியத்தையும், திறந்த வானில் பறக்கும் வாய்ப்பையும் கொடுத்துள்ளோம். உலகில் இந்தியாவின் நிலையை நாங்கள் சரிசெய்துள்ளோம். அவர்களை புதிய உயரங்களுக்குக் கொண்டு சென்றுள்ளோம். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் என்ற போர்வையில் மக்களின் நம்பிக்கையை உடைக்க எதிர்க்கட்சிகள் தோல்வி காணும் முயற்சியை மேற்கொண்டுள்ளன. ஸ்டார்ட்அப் சூழல், சாதனை, வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதி ஆகியவை புதிய உச்சங்களைத் தொட்டுள்ளன. இன்று ஏழைகளின் இதயத்தில் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற ஒரு நம்பிக்கை உருவாகியுள்ளது. 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு வருவது குறித்த நித்தி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா ஏறத்தாழ வறுமையை ஒழித்துவிட்டது என்று சர்வதேச செலாவணி நிதியம் அறிவித்துள்ளது. இந்திய நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டம் மற்றும் பிற சமூக நலத் திட்டங்கள் ஒரு திட்டமிடலின் அதிசயம் ஆகும்.  ஜல் ஜீவன் இயக்கம் நாட்டில் 4 லட்சம் உயிர்களைக் காப்பாற்ற உதவுகிறது, தூய்மை இந்தியா இயக்கம் 3 லட்சம் உயிர்களைக் காப்பாற்ற உதவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இவர்கள் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வசிக்கும் நாட்டின் ஏழை மக்கள். தூய்மை இந்தியா திட்டம், நாட்டின் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 சேமிக்க உதவுகிறது என்பதை யுனிசெப் எடுத்துக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சிகள் அவநம்பிக்கையில் மூழ்கியுள்ளதால் மக்களின் நம்பிக்கையை அவர்களால் பார்க்க முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் மோசமான மொழியும், இடைவிடாத பேச்சும் கலா டிக்கா (கெட்ட சகுனத்தை விரட்டுவது) போல செயல்படுகிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தால் இலக்கு அமைப்புகள் அனைத்தும் எப்போதும் பிரகாசிக்கின்றன. இது எதிர்க்கட்சிகளின் ரகசிய வரம். அவர்கள் யாருக்குக் கெட்டதை விரும்புகிறார்களோ, அவர்கள் நன்றாகவே செயல்படுவார்கள்.

வங்கித் துறை குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் மக்களைக் குழப்புவதற்கும் எதிர்க்கட்சிகள் தங்களால் முடிந்தவரை முயன்றனர். ஆனால் அது நிறைவேறவில்லை. பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. எச்ஏஎல் வெற்றியின் புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாயைப் பதிவு செய்துள்ளது. அதே போல், எல்.ஐ.சி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

 

 

நாட்டின் திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பு மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. னது மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று  சில நாட்களுக்கு முன் நான் பேசியிருக்கிறேன். பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் இந்த இலக்கை அடைவதற்கான அவர்களின் செயல்திட்டம் குறித்து  பேசியிருக்க வேண்டும். அரசிடம் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் ஆலோசனைகளை வழங்கியிருக்க வேண்டும், ஆனால் அப்படி நடக்கவில்லை. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு எதுவும் செய்யத் தேவையில்லை என்று கூறும் எதிர்க்கட்சிகளின் மெத்தனத்தை அவர் சாடினார். எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை, கொள்கைகள், நோக்கங்கள், தொலைநோக்குப் பார்வை, உலகப் பொருளாதாரம் பற்றிய அறிவு, இந்தியாவின் திறன்கள் பற்றிய புரிதல் ஆகியவற்றின் பற்றாக்குறையைக் குறிக்கிறது.

மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,

1991-ல் இந்தியா வறுமையில் மூழ்கியது, திவால்நிலையின் விளிம்பில் இருந்தது. இருப்பினும், 2014 க்குப் பிறகு, உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் இந்தியா இடம் பிடித்தது. சரியான திட்டமிடல் மற்றும் கடின உழைப்புடன் சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்என்ற மந்திரத்தின் மூலம் இது சாதிக்கப்பட்டது.  இது தொடரும், தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். 2028 ஆம் ஆண்டில், நீங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரும்போது, இந்தியா முதல் 3 இடங்களுக்குள் இருக்கும்.

 

காங்கிரஸ் ஆட்சியின் போது காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவினர்.  அவர்களின்  தாக்குதல் தொடரும் என்று பாகிஸ்தான் கூறியது. இருப்பினும் அப்போதைய அரசு பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்தது. இது தான் அவர்களின் மனநிலையாக இருந்தது. காஷ்மீர் மக்களுக்குப் பதிலாக ஹுரியத் உடனான அவர்களின் தொடர்பு நீடித்தது. பிரிவினைவாதிகளிடம்  அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையால் பயங்கரவாதிகள் காஷ்மீரில்  பாகிஸ்தான் கொடிகளை ஏந்திச்சென்றனர். எங்கள் ஆட்சி வந்தபின் பயங்கரவாதத்துக்கு எதிராக துல்லிய தாக்குதல், வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

 

நாட்டைப் பற்றி தவறாகப் பேசுபவர்களை எதிர்க்கட்சிகள் விரைவாக நம்புகின்றன. உணவுப் பாதுகாப்பின்மையைக் கையாளும் ஒரு நாடு சில அளவுகோல்களில் இந்தியாவை விட முன்னணியில் இருப்பதாக ஒரு வெளிநாட்டு நிறுவனம் தவறான அறிக்கை வெளியிட்டது. எதிர்க்கட்சிகள் இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிட்டு, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை களங்கப்படுத்த முயற்சிக்கின்றன. உதாரணமாக, மேட் இன் இந்தியா கொரோனா தடுப்பூசி. எதிர்க்கட்சிகள் அதை நம்பவில்லை, மாறாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை நோக்கின. இந்தியா மற்றும் அதன் மக்களின் திறன்களை எதிர்க்கட்சிகள் நம்பவில்லை. மக்களின் பார்வையில் எதிர்க்கட்சிகள் மீதான நம்பிக்கையின் அளவு மிகக் குறைவாக உள்ளது.

கூட்டணிக் கட்டமைப்பின் ஒப்பனை மாற்றங்கள் நாட்டு மக்களை முட்டாளாக்க முடியாது. சாதாரண பெயர் மாற்றம் எதிர்க்கட்சி கூட்டணியின் எதிர்காலத்தை மாற்றாது. அவர்கள் தப்பிப்பிழைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உதவியை நாடியுள்ளனர். ஆனால்  அதில் இரண்டு திமிர் பிடித்த ‘-கள் உள்ளன. முதலாவது ; 26 கட்சிகளின் ஈகோவுக்கானது. இரண்டாவது ஒரு குடும்பத்தின் ஈகோவுக்கானது. அவர்கள் இந்தியாவை ஐ.என்.டி.ஐ.ஏ என பிளவுபடுத்தியுள்ளனர். எதிர்க்கட்சிகள் பெயர்களை மாற்றுவதை நம்புகின்றன, ஆனால் அவர்கள் தங்கள் பணிக் கலாச்சாரத்தை மாற்ற முடியாது. தமிழக அரசின் அமைச்சர் ஒருவர் பிரிவினைவாத கருத்தை வெளியிடுகிறார்.  ஆனால் அந்த மாநிலத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அம்மாநிலம், தேசபக்தியின் நீரோடை தொடர்ந்து பாயும் மாநிலம்.

சுதந்திரப் போராட்ட வீரர்களும், நாட்டின் நிறுவனர்களும் எப்போதுமே வாரிசு அரசியலை எதிர்த்தனர். வாரிசு அரசியலால் முக்கிய தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற அரசியலால் பாதிக்கப்பட்ட பல ஜாம்பவான்களின் உருவப்படங்கள் காங்கிரஸ் அல்லாத அரசாங்கங்களின் பிந்தைய ஆண்டுகளில் மட்டுமே நாடாளுமன்றத்தில் இடம் பெற்றன. ஒற்றுமை சிலை மற்றும் பிரதமர்களின் அருங்காட்சியகம் எங்கள் ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம்  அனைத்துப் பிரதமர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டிருப்பது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. இலவச அரசியல் கொண்டு வரும் அழிவுக்கு அண்டை நாடுகளின் நிலைமையை நாம் காண முடியும். பொறுப்பற்ற வாக்குறுதிகள் மூலம் தேர்தலில் வெற்றி பெறும் போக்கு காணப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்கள் கிடப்பில் போடப்படுவதால் மக்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,

மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒருபோதும் ஆர்வம் காட்டவில்லை. உள்துறை அமைச்சர் எந்த அரசியலும் இல்லாமல் பொறுமையாக பிரச்சினைகளை விரிவாக விளக்கினார். உள்துறை அமைச்சரின் விளக்கம் நாடு மற்றும் தேசத்தின் கவலையை வெளிப்படுத்தும் முயற்சியாகும். இது மணிப்பூருக்கு அவையின் நம்பிக்கையை தெரிவிக்கும் முயற்சியாகும். விவாதித்து வழிகளைக் கண்டறிவதற்கான நேர்மையான முயற்சி இது.

மணிப்பூரில் நடந்த வன்முறை வருத்தமளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஏற்க முடியாது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசும், மாநில அரசும் பாடுபடும். நாங்கள் எடுக்கும் முயற்சியின் அடிப்படையில் வரும் காலங்களில் மணிப்பூரில் அமைதி நிலவும் என்று இந்திய மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். மணிப்பூர் மக்களுக்கும், மணிப்பூரின் தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கும் தேசம் துணை நிற்கும். மணிப்பூர் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் .

 தற்போதைய அரசில், அமைச்சர்கள் வடகிழக்கின் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் 400 இரவுகள் தங்கியுள்ளனர். பிரதமர் என்ற முறையில், நான் 50 முறை பயணம் செய்துள்ளேன். வடகிழக்குடன் எனக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு உள்ளது. பிரதமராவதற்கு முன்பே, நான் பிராந்தியம் முழுவதும் பயணம் செய்துள்ளேன்.

மணிப்பூரில்  ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் காங்கிரசும் அதன் அரசியலும்தான். மணிப்பூர் வளமான இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்தது. மணிப்பூர் எண்ணற்ற தியாகங்களின் பூமி. இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தீவிரவாத அமைப்புகளின் அழைப்பின் பேரில் செயல்பட்டது. அரசு அலுவலகங்களில் மகாத்மா காந்தியின் படம் வைக்க தடை விதிக்கப்பட்டது. மொய்ராங்கில் உள்ள ஆசாத் ஹிந்த் அருங்காட்சியகத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை மீது குண்டு வீசப்பட்டது. மணிப்பூர் பள்ளிகளில் தேசிய கீதம் பாட தடை விதிக்கப்பட்டது. நூலகங்களில் இருந்து புத்தகங்களை எரிக்கும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

உலகளாவிய அமைப்பில் உள்ள இயக்கங்கள் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆசியான் நாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற உண்மையையும், அது வடகிழக்கில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும். என்பதையும் நான் அறிவேன். அதனால்தான் வடகிழக்கின் வளர்ச்சிக்கு எங்கள் அரசு முன்னுரிமை அளித்துள்ளது. நவீன நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் விமான நிலையங்கள் வடகிழக்கின் அடையாளமாக மாறி வருகின்றன. அகர்தலா முதல் முறையாக ரயில் இணைப்புடன் இணைக்கப்பட்டது. சரக்கு ரயில் முதல் முறையாக மணிப்பூரை அடைந்தது, முதல் முறையாக வந்தே பாரத் போன்ற நவீன ரயில் இப்பகுதியில் ஓடியது, அருணாச்சல பிரதேசத்தில் முதல் கிரீன்பீல்டு விமான நிலையம் கட்டப்பட்டது, சிக்கிம் விமானப் பயணத்துடன் இணைக்கப்பட்டது, வடகிழக்கில் முதல் முறையாக எய்ம்ஸ் திறக்கப்பட்டது. மணிப்பூரில் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் மற்றும் மிசோராமில் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனம் முதன்முறையாக திறக்கப்பட்டது. அமைச்சரவையில் பங்கேற்பு அதிகரித்தது, முதல் முறையாக, ஒரு பெண் மாநிலங்களவையில் நாகாலாந்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். முதல் முறையாக வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பலருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. லச்சித் பர்ஃபுகன் போன்ற ஒரு நாயகன் குடியரசு தினத்தன்று கொண்டாடப்பட்டார். ராணி கெய்டின்லியுவின் பெயரில் ஒரு அருங்காட்சியகம் நிறுவப்பட்டது.

எங்களைப் பொறுத்தவரை, அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் என்பது ஒரு முழக்கம் அல்ல, மாறாக நம்பிக்கையின் ஒரு தொகுப்பு, அர்ப்பணிப்பு. உடலின் ஒவ்வொரு துகள்களையும் ஒவ்வொரு கணத்தையும் நாட்டு மக்களின் சேவைக்காக அர்ப்பணிப்பேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சிக்கான மேடை அல்ல. நாடாளுமன்றம் நாட்டின் மிக உயர்ந்த அமைப்பாகும். எனவே, உறுப்பினர்கள் இதில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம். ஏராளமான நிதி இதற்கு ஒதுக்கப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு விநாடியும் நாட்டுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். தீவிரத்தன்மை இல்லாமல் ஒருவர் அரசியல் செய்யலாம், ஆனால் நாட்டை நடத்த முடியாது.

கடந்த 9 ஆண்டுகளில், சாமானிய குடிமக்களின் நம்பிக்கை புதிய உயரங்களுக்கு முன்னேறி வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.  இன்றைய இந்தியா அழுத்தத்தால் நொறுங்கவில்லை. இன்றைய இந்தியா வளைவதில்லை, சோர்வடைவதில்லை, நிற்பதில்லை. சாமானிய மக்களின் நம்பிக்கைதான் இந்தியாவை நம்ப உலகுக்கு உத்வேகம் அளிக்கிறது. இந்தியா மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கை, சாமானிய மக்களுக்கு அதிகரித்து வரும் நம்பிக்கைக்குக் காரணம்.

கடந்த சில ஆண்டுகளில், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு வலுவான அடித்தளங்களை அமைப்பதில் எங்கள் அரசு வெற்றி பெற்றுள்ளது. இந்த நம்பிக்கைதான் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும். மோசமான சூழ்நிலைகளில் இருந்து நாடு ஒன்றிணைந்துள்ளது. மணிப்பூர் நிலத்தை அற்ப அரசியலுக்கு அரசியல் கட்சிகள் தவறாகப் பயன்படுத்த வேண்டாம். வலி மற்றும் துன்பத்திற்கு நாம் அனுதாபம் கொள்ள வேண்டும்; மீட்புக்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இதுதான் முன்னோக்கி செல்லும் வழியாகும்.

 இந்த தீர்மானத்தின் மீது சிறந்த விவாதம் நடைபெற்றுள்ளது. இந்த அரசின் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்க நாங்கள் ஒரு வாய்ப்பை பெற்றிருக்கிறோம்.  இந்த தீர்மானம் எங்களுக்கு எதிராக  கொண்டுவரப்படாமல் இருந்தால் இவ்வளவு விரிவாக விளக்கம் அளிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும். எனவே இந்த தீர்மானத்தை கொண்டுவந்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நான் நன்றி தெரிவிக்கிறேன். ஆனால் இந்த தீர்மானம் என்பது நாட்டிற்கு இழைக்கும் துரோகத்தீர்மானமாகும். இந்த தீர்மானத்தை நாட்டு மக்கள் நிராகரிக்க வேண்டும்.  மாண்புமிகு அவைத்தலைவருக்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றியை தெரிவித்து எனது உரையை நிறைவுசெய்கிறேன்.

மிக்க நன்றி.

***